WPL 2024 Final: அதிரடியாக தொடங்கிய டெல்லி; ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மோலினக்ஸ் - ஆர்சிபி வாய்ப்பு பிரகாசம்!

Updated: Sun, Mar 17 2024 21:03 IST
WPL 2024 Final: அதிரடியாக தொடங்கிய டெல்லி; ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மோலினக்ஸ் - ஆர்சிபி வாய்ப்பு (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னேறின. அதன்படி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் தொடக்கம் கொடுத்தனர். ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை ரேணுகா சிங் வீசினார். அந்த ஓவரில் பவுண்டரிகளே கொடுக்காமல் கட்டுப்படுத்தியா ரேணுகா சிங் 9 ரன்களைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய ஷஃபாலி வர்மா சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி தள்ளி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

அவருக்கு துணையாக கேப்டன் மெக் லெனிங்கும் பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்து அசத்தியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஷஃபாலி வர்மா 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 44 ரன்கள் சேர்த்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஜார்ஜியே வேர்ஹாமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலிஸ் கேப்ஸி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி சோஃபி மோலினக்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 64 ரன்கள் வரை விக்கெட் ஏதுமின்றி விளையாடி வந்த டெல்லி அணி அந்த ஓவரின் முடிவில் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாகியது. அதன்பின் கேப்டன் லெனிங்குடன் இணைந்த மரிஸான் கேப் அணியின் நல்ல நிலைக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ரசிகர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கேப்டன் மெக் லெனிங் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 8 ரன்களில் மரிஸான் கேப்பும், 3 ரன்களில் ஜெஸ் ஜோனசெனும், 5 ரன்களில் மின்னு மணியும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளாலும் ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணொ 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷ்ரெயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை