உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது.

Advertisement

பின்னர் விளையாடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

Advertisement

அதன் பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் ஜடேஜா ஓவரில் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் எடுத்த ஸ்மித், 2ஆவது இன்னிங்ஸில் 34 ரன்களில் வெளியேறினார். இதே போன்று டிராவிஸ் ஹெட்டும் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2அவது இன்னிங்ஸில் 18 ரன்களில் வெளியேறினார். 

இறுதியாக 3ஆவது நாளில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் லபுஷேன் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் 4ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில், லபுஷேன் 41 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு க்ரீன் 25 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் பவுண்டரியாக அடிக்க ஆஸ்திரேலியா அதிக ரன்கள் குவித்தது. 

இதில், ஸ்டார்க் 7 பவுண்டரிகள் உடன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 5 ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா 270 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக மொத்தமாக 443 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் இந்திய அணிக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 18 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில் மூன்றாம் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித்துடன் இணைந்த புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Advertisement

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 27 ரன்களை எடுத்திருந்த சட்டேஷ்வர் புஜாராவும் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - அஜிங்கியா ரஹானே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  அதிலும் விராட் கோலி அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 

இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்கியா ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 280 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News