யுவராஜ் சிங்குக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ரோஹித் சர்மா!

Updated: Wed, Oct 04 2023 16:15 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் 10 அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. குஜராத்தில் இன்று மாலை நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழாவை முன்னிட்டு கலந்து கொள்ளும் 10 கேப்டன்களும் அஹ்மதாபாத் வந்துள்ளனர்.

இவர்களுக்கான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கேப்டன்கள் பதிலளித்தனர். இந்த நிகழ்ச்சியை ரவி சாஸ்திரி மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் தொகுத்து வழங்கினார். சமூக ஊடகங்களின் மூலமாகவும் நேரலையில் இந்த சந்திப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது .

இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பையில் இந்தியாவை வழி நடத்துவது மிகவும் பெருமையான ஒரு தருணம் என தெரிவித்தார். அதுவும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று என்று குறிப்பிட்ட அவர் இந்திய அணியை வழிநடத்துவது எல்லாருக்கும் கிடைத்து விடாத ஒன்று எனவும் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவோ ஜாம்பவான்கள் இருந்தும் அணியை வழிநடத்தக்கூடிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை என தெரிவித்த அவர் கௌதம் கம்பீர் மற்றும் விரேந்தர் சேவாக் போன்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே இந்தியாவை கேப்டன்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய அணியின் சிறந்த மேட்ச் வின்னரான யுவராஜ் சிங் ஒரு போட்டியில் கூட இந்தியாவை வழி நடத்த முடியவில்லை என தெரிவித்த அவர் நிச்சயமாக யுவராஜ் சிங்குக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

கேப்டன்சி மிகவும் தாமதமாக தனக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், “நான் அணிக்கு வந்த போது எம் எஸ் தோனி கேப்டனாக இருந்தார். அதன் பிறகு 200 போட்டிகளுக்கு மேல் விராட் கோலி கேப்டன் பதவி வகித்தார். அவர்களுக்குப் பிறகு நான் தற்போது கேப்டனாக வந்திருக்கிறேன். எல்லோருக்கும் இளம் வயதிலேயே கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நமக்கான நேரம் வரும். எனக்கு முன்னால் கேப்டனாக இருந்தவர்கள் கேப்டனாக இருப்பதற்கு தகுதி உடையவர்கள். அதனால் எனது கேப்டன் பதவிக்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அதில் தவறு எதுவும் இல்லை.

மேலும் தனக்கு முன் எத்தனையோ ஜாம்பவான் கிரிக்கெட்டர்களிலிருந்தும் அவர்களுக்கெல்லாம் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுதான் வாழ்க்கை. நல்லா அனுபவமிக்க வீரராக அணியை தலைமை ஏற்று வழி நடத்துவது சிறப்பான அனுபவம். கேப்டன்சி என்றால் என்னவென்று தெரியாத ஒரு கட்டத்தில் கேப்டனாக இருப்பதை விட கேப்டன் பொறுப்பு பற்றிய அனுபவம் மற்றும் சிந்தனை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு அணியை வழிநடத்துவதில் மகிழ்ச்சி” எனவும் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை