இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீது கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

இதில் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விளையாட்டுத்துறையில் கபில் தேவ் தலைமையில் 1983 உலக கோப்பையை இந்திய அணி வென்றதே மாபெரும் புரட்சி ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அதனால் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய கிரிக்கெட்டில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மாபெரும் சரித்திரம் படைத்தது. 

Advertisement

அதே போல தற்போது 1987, 1996, 2011 போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டும் நடைபெறும் இந்த உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பதால் இம்முறை கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் அடங்கிய இறுதிக்கட்ட இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஆசிய கோப்பை தொடரில் இருந்த பொழுது உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், தற்பொழுது அக்ஸர் படேல் காயத்தால் இடம் பெறாத காரணத்தினால், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இப்பதில் பார்ப்போம்.

இந்திய அணியின் பலம்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகம் என்று எடுத்துக் கொண்டால் முதலில் இருப்பது இத்தொடர் உள்நாட்டில் நடப்பதுதான். தட்பவெப்பம் மற்றும் மைதானங்களில் ஆடுகளங்கள் இந்திய வீரர்களுக்கு பழக்கமான ஒன்று. மேலும் சொந்த நாட்டில் நடப்பதால் ரசிகர்களின் ஆதரவு மிக அதிகப்படியாக இருக்கும். இதற்கடுத்து தற்போது அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் 15 பேரும் அவரவர் துறைகளில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். பெரிதாக யாரையும் குறை சொல்லும் அளவுக்கு கிடையாது.

Advertisement

இந்திய அணியின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்த வருடம் இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் ரோகித் சர்மா அணிக்கு மிகச்சிறந்த அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து நம்பிக்கையை தருகிறார். மேலும் விராட் கோலி தன்னுடைய பழைய பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். கேஎல் ராகுலின் அனுபவம் மற்றும் தரம் மீண்டும் வெளிப்பட்டு இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் 4ஆவது இடத்திற்கான போட்டியில் உள்ளனர். இந்திய சூழ்நிலையில் இவர்களை நடுவரிசையில் தேவைக்கு தகுந்தபடி ஆட வைக்க அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. 

ஆறாவது இடத்தில் யாருக்கும் கிடைக்காத அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இந்த வகையில் பேட்டிங் யூனிட் மிக பலமாக இருக்கிறது. இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்கும் பத்து அணிகளில் முதலிடம் இந்திய பவுலிங் யூனிட்டுக்கு தரலாம். வேகப்பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, ஹர்திக் என உலக தரத்தில் இருக்கிறார்கள். மேலும் சுழற் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என அனுபவமும் திறமையும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களால் எந்த நேரத்திலும் ஆட்டத்தில் விக்கெட்டை எடுக்க முடியும். இது மற்ற அணிகளின் பவுலிங் யூனிட்டில் பார்க்க முடியாத ஒன்று.

இந்திய அணியின் பலவீனம் 

Advertisement

அதே சமயத்தில் பலவீனம் என்று எடுத்துக் கொண்டால் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை. இதனால் பொறுப்பு முதல் 6 பேட்ஸ்மேன்கள் மேல் விழுகிறது. அடுத்து இந்திய அணியின் ஃபீல்டிங் மிக கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. எளிமையான கேட்சை கூட கோட்டை விடுகிறார்கள். இது ஆபத்தான ஒன்று. இந்த இரண்டும் சிறிய கவலையை கொடுக்க கூடியது. மற்றபடி இந்திய அணியை எடுத்துக் கொண்டால் வீரர்கள் உடல் தகுதியிலும், மனரீதியான நம்பிக்கையிலும், செயல்பாட்டு அளவிலும் பெரிய வெற்றிகளை பெற்று உச்சத்தில் இருக்கிறார்கள். 

நிச்சயமாக இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான தகுதிகள் கொண்ட அணிதான். வென்றால் ஆச்சரியப்பட எதுவுமே கிடையாது. தற்பொழுது இந்திய அணியின் பலமாக பந்துவீச்சு மாறி இருக்கிறது. அதிரடியாக விளையாடக்கூடிய பேட்டிங் நீளம் சிறியதாக இருக்கிறது. எனவே பந்துவீச்சை மிக பலமாக அமைத்துக் கொண்டு, தங்கள் பேட்டிங் வரிசையால் எதிர்கொள்ள முடிந்த இலக்குக்கு எதிரணியை நெருக்குவதுதான், உலக கோப்பையை வெல்வதற்கான சிறந்த வழி. எனவே பீல்டிங் உலக தரத்தில் அமைய வேண்டியது மிக மிக அவசியம்.

மேலும் இந்திய ஆடுகளங்களில் இரண்டு பேட்மேன்களுக்கு அன்றைய நாள் அமைந்தாலே, முழு ஆட்டத்தையும் கையில் எடுக்க முடியும். இதன் காரணமாக இந்திய அணிக்கு இருக்கின்ற பேட்டிங் வரிசையின் நீளம் மிக கவலைப்பட வேண்டிய ஒன்று கிடையாது. பொதுவாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அன்றைய நாளில் அந்தந்த நேரத்தில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, சரியான முடிவுகள் எடுக்கிறார்களோ அவர்களே வெல்வார்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரம் மிகக் குறைவு. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியா சிறந்த அணியை கொண்டிருக்கிறது, சரியான திட்டங்கள் உடனும் நம்பிக்கையுடனும் களத்தில் விளையாடினால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

Advertisement

இந்திய அணியின் உலகக்கோப்பை வரலாறு

  •      1975: குரூப் ஸ்டேஜ்
  •      1979: குரூப் ஸ்டேஜ்
  •      1983: சாம்பியன்
  •      1987: அரையிறுதி சுற்று
  •      1991: ரவுண்ட் ராபின்
  •      1996: அரையிறுதி சுற்று
  •      1999: சூப்பர் சிக்ஸ்
  •      2003: இரண்டாம் இடம்
  •      2007: குரூப் ஸ்டேஜ்
  •      2011: சாம்பியன்கள்
  •      2015: அரையிறுதி சுற்று
  •      2019: அரையிறுதி சுற்று

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி 

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News