
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 06) புலவாயோவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் மற்றும் மார்க் அதிர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 7ஆவது விக்கெட்டிற்கு 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களைச் சேத்திருந்த மார்க் அதிர் தனது விக்கெட்டை இழந்தார்.
பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்டி மெக்பிரைன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க விரர் பென் கரண் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.