
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தா அணியில் காம்ரன் குலாம் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாஅமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம், கார்பின் போஷ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 89 ரன்களையும், அறிமுக வீரர் கார்பின் போஷ் 81 ர்னகளையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் குர்ராம் ஷஷாத் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அமீர் ஜமால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.