SL vs AUS, 1st Test: இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா இரட்டை சதமடித்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கில்ஸ் ஆகியொர் சதம் அடித்தும் அசத்தினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 232 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 102 ரன்களையும் சேர்த்தனர்.இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் ஒஷாதா ஃபெர்னாண்டோ, திமுத் கருணரத்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Trending
அடுத்து வந்த தினேஷ் சண்டிமால் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் கடந்து அசத்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸ் 15 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 22 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் தினேஷ் சண்டிமாலுடன் இணைந்துள்ள குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். அதன்பின் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் உணவு இடைவேளையுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமால் 63 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 10 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் குசால் மெண்டிஸ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமாலும் 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேத்யூ குஹ்னேமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 489 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்து இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சோபிக்க தவறினர். அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணர்த்னே ரன்கள் ஏதுமின்றியும், ஒஷாதா ஃபெர்னாண்டோ 6 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை அணி 6 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அத்ன்பின் ஜோடி சேர்ந்த அணியின் அனுபவ வீரர்கள் தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் 31 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, நிதானமாக விளையாடிவந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 41 ரன்களிலும், கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா 39 ரன்களுக்கும், குசால் மெண்டிஸ் 34 ரன்களுக்கும், பிரபாத் ஜெயசூர்யா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய ஜெஃப்ரி வண்டர்சே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 247 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேத்யூ குஹ்னேமன், நாதன் லையன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now