
சர்வதேச கிரிக்கெட்டில் இருதரப்பு தொடர்களை விட ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது. அதனாலேயே 2 வருடத்திற்கு ஒருமுறை அல்லது 4 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைகளை வெல்வதை அனைத்து முன்னணி நாடுகளும் தங்களது முதன்மையான இலக்காக வைத்து எஞ்சிய நாட்களில் விளையாடுகின்றன.
உலக கோப்பையை வெல்வதைப் போலவே அதை நடத்துவதும் ஒரு நாட்டைப் பொறுத்தவரை மிகப் பெரிய கௌரவமாகும். ஏனெனில் அதை நடத்தும் போது ஒட்டுமொத்த உலகின் கவனம் தங்களது நாட்டின் மீது இருக்கும் என்பதுடன் வரலாற்றிலும் அந்த உலக கோப்பையால் அதை நடத்தும் நாடு இடம் பிடிக்கும். மேலும் அதனால் தங்களது வாரியத்திற்கு பணமும் நாட்டின் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். அதைவிட உலகக்கோப்பை தங்களது நாட்டில் நடைபெறும் போது தங்களது அணிக்கு சொந்தமண் சாதகத்தால் கோப்பை வெல்வதற்கும் அதிக வாய்ப்பு கிடைக்கும்.
அதனாலேயே ஒவ்வொரு முறை உலகக்கோப்பையை ஐசிசி நடத்தும் போது அதை தங்களது நாட்டில் நடத்துவதற்கான உரிமையை வாங்க அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கடுமையாக போட்டிபோடும். அந்த வகையில் வரும் 2024 – 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பைகளை நடத்தும் உரிமங்களை நிர்ணயிக்கும் ஐசிசி உயர்குழு கூட்டம் நேற்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.