Advertisement

2nd Test, Day 2: இரட்டை சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்; 396 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 03, 2024 • 11:08 AM
2nd Test, Day 2: இரட்டை சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்; 396 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
2nd Test, Day 2: இரட்டை சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்; 396 ரன்களில் இந்தியா ஆல் அவுட்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. 

இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.  இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

Trending


அதன்பின் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் 27 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தைக் கொடுத்தார். பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இனைந்த ராஜத் பட்டிதார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.

ஆனால், ஜெய்ஸ்வால் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி அவர், 150 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்த போது, டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்தார்.

அதேசமயம் தனது அறிமுக போட்டியில் விளையாடிய ராஜத் பட்டிதார் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல் 27 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் 17 ரன்களும் என விக்கெட்டை இழந்தனர். இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 150 ரன்களையும் கடந்ததுடன், அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்திச்சென்றார்.

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெஸ்வால் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 19 பவுண்டரி, 7 சிச்கர்கள் என 209 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் களமிறங்கிய குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோரும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement