2nd Test, Day 3: இங்கிலாந்து 407 ரன்னில் ஆல் அவுட்; அதிரடி காட்டும் இந்திய அணி!
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Birmingham Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்திய அணி வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர்.இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஸாக் கிரௌலி உள்ளிட்டோர் சோபிக்க தவியதன் காரணமாக அந்த அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஹாரி புரூக் 30 ரன்களுடனும், ஜோ ரூட் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜோ ரூட் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஹாரி புரூக்குடன் இணைந்த ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் தங்களுடைய சதங்களைப் பூர்த்தி செய்ததுடன் 300 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 158 ரன்களில் ஹாரி புரூக் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 407 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதன் மூலம் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யஷஸ்வி ஜெஸ்வால் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் ராகுலுடன் இணைந்துள்ள கருண் நாயர் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இதன் காரணமாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங்க் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து 244 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now