
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டு தொடர்களையும் ழுவதுமாக கைப்பற்றியதுடன் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
அந்தவகையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணியானது சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலமும், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 75 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களையும், ரியான் பராக் 34 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிடோய் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதேசமயம் லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.