
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றி மார்க் வுட் வேகத்தில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் டாம் ஹார்ட்லி வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, இந்திய அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.