4th Test, Day 5: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; தோல்வியைத் தவிர்க்க போராடும் இந்திய அணி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்துள்ளது.

Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் கிரௌலி 84 ரன்களுக்கும், பென் டக்கெட் 94 ரன்களுக்கும், ஒல்லி போப் 71 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் சதமடித்து அசத்திய நிலையில் ஜோ ரூட் 150 ரன்களுக்கும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர் இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து கேஎல் ராகுல் 87 ரன்களையும், ஷுப்மன் கில் 78 ரன்களுடனும் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் இருவரும் இணைந்து 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேஎல் ராகுல் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மன் கில் இத்தொடரில் தனது நான்காவது சதத்தைப் பதிவுசெய்த நிலையில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் காரணமாக கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இந்திய அணி 88 ரன்கள் பின் தங்கியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now