
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜனவரி 03) நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடிக்காததன் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இந்திய அணி 17 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத் தொடர்ந்து காளமிறங்கிய விராட் கோலியும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்திருக்கும் தருணம் இருந்த நிலையில் அதிர்ஷ்டத்தால் தப்பினார்.