
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள், கழற்றி விட்ட வீரர்கள் மற்றும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளன. அதில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்டிக் பாண்டியா திடீரென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் மும்பை அணியில் தம்முடைய ஐபிஎல் கேரியரை தொடங்கி 2021 வரை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினாலும் 2022 சீசனில் அவரை 15 கோடிக்கு வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த அவர் 2ஆவது சீசனில் இறுதிப்போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச் சென்று அசத்தினார்.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் போது பாண்டியா ஏன் மும்பைக்கு சென்றார் என்பதே பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் டி20 கேப்டன்ஷிப் வேண்டும் என்பதற்காக பாண்டியா மும்பைக்கு சென்றிருந்தால் அது அவருடைய தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.