
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியடைந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளார்.
இதன் காரணமாக நீண்ட காலமாக வாய்ப்புக்காக காத்திருந்த சர்ஃப்ராஸ் கான் முதன் முதலாக இந்திய அணிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் ‘டான் பிராட்மேன்’ என்றழைக்கப்பட்டு வந்த சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள செய்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றதுடன், அவருக்கான வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.