
டி20 உலக கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது. முகமது ரிஸ்வானின் டாப் ஃபார்ம், ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸ் பெற்றது, பாபர் அசாமின் ஃபார்ம், ஃபாஸ்ட் பவுலர்களின் மிரட்டலான வேகம் ஆகியவை பாகிஸ்தானுக்கு பலம் சேர்க்கிறது.
டி20 உலக கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் பாகிஸ்தான் அணிக்கு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி ஆடிவரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் வைரல் தொற்றால் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பாகிஸ்தான் அணிக்கு கவலையளிக்கிறது.