
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி 8 போட்டிகளில் 2 வெற்றி 6 தோல்விகளை பதிவு செய்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. ஆனால் அந்த அணி 2ஆவது வெற்றியை பதிவு செய்த விதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சிலோ மேத்யூஸ் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த போது ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்ததால் மாற்றுவதற்கு முயற்சித்தார்.
அப்போது அவர் வேண்டுமென்றே காலம் தாமதம் செய்வதாக தெரிவித்த வங்கதேச அணியினர் தங்களுக்கு அவுட் கொடுக்க வேண்டும் என்று நடுவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதை சோதித்த நடுவர்கள் முந்தைய பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பேட்ஸ்மேன் அதற்கடுத்த 2 நிமிடத்திற்குள் வந்து பந்தை எதிர்கொள்ளவில்லை என்ற விதிமுறையை மீறியதால் மேத்யூஸ் அவுட் என்று அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
அதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் வங்கதேசம் மற்றும் ஷாகிப் மீதான மரியாதை போய் விட்டதாக விமர்சித்ததுடன் தாம் 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் வந்த வீடியோ ஆதாரத்தை ஐசிசியிடம் சமர்ப்பித்து நியாயமும் கேட்டார். அந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் செய்த இந்த நிகழ்வை பெவிலியனிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் களத்திற்கு சென்று “போதும் நிறுத்துங்கள் என்று திட்டலாம்” என நினைத்ததாக வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் வெளிப்படையாக விமர்சித்தார்.