
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் விளையாடிவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்விகள் என சந்தித்து புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீசனில் பல்வேறு நட்சத்திர வீரர்களைக் கொண்டு விளையாடிவரும் ஆர்சிபி அணியானது இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனிலாவது அந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இத்தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் அந்த அணி மூன்று தோல்விகளைத் தழுவியதுடன் அந்த அணி ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதிலும் நடப்பு சீசனில் அந்த அணியின் விராட் கோலி தனியாளாக போராடிவரும் நிலையில், மற்ற நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் பெரும்பாலான வீரர்கள் பேட்டிங்கில் சொதபியதே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் காலம் காலமாக அழுத்தமான சூழ்நிலைகளில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதில்லை என்று அம்பாத்தி ராயுடு குற்றம் சாட்டியுள்ளார்.