
நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் அமெலியா கெர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பாட்டுள்ளது.