
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியினை பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை குவித்தது. பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் இறுதிவரை வெற்றி இலக்கை நோக்கி மிகச் சிறப்பாக முன்னேறி வந்தது.
குறிப்பாக வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் களத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் இருந்ததால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முக்கியமான இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மேத்யூ வேட் விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.