
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார்.
இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியல்ல என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்தார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி மேலும் கூறுகையில், ''எனக்கு ஓய்வுகளில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். உண்மையைச் சொல்வதென்றால் உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகளுக்கு என்ன தேவை? ஐபிஎல் தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வு உங்களுக்கு போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் தனது அணியுடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்'' என்று கூறினார்.