
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தற்போது சூப்பர் போர் சுற்று ஆட்டத்திலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
அதன்படி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி போட்டியின் கடைசி பந்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ் 87 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 91 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.