
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது இம்மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியானது மெக்காயில் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 107 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 36 ரன்களைச் சேர்த்தர். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையாடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியிலும் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்கெடுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 39 ரன்களையும், கூப்பர் கனொலி 37 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.