
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சூரியகுமார் தலைமையில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
மறுபுறம் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் சந்தித்த தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல என்று சொல்லலாம். இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் படியாக நடைபெறும் இத்தொடரில் எஞ்சிய போட்டிகளில் வென்றால் தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற நிலைமைக்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.
எனவே இன்று கௌகாத்தியில் நடைபெறும் 3ஆவது போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா தங்களுடைய அணியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதில் உலகக்கோப்பை முழுவதும் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸாம்பா, கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஷ் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரின் கடைசி 3 போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.