
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலா 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. அந்தவகையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் நிலையில் அடுத்தாடுத்த போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். மேலும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அக்ஸர் படேலும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களில் யாரேனும் ஒருவர் அணியின் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.