
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கன்னொலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட்டும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் போல்டாவதில் இருந்து தப்பினார். அதன்படி இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை அக்ஸர் படேல் வீசிய நிலையில் அந்த ஓவரை கடைசி பந்தை எதிர்கொண்ட ஸ்மித் பந்தை தடுத்து விளையாட முயற்சித்தார். அப்போது பந்து அவரின் பேட்டில் பட்டவுடன் பின்னோக்கி உருண்டு ஆஃப்-ஸ்டம்பின் அடிப்பகுதியைத் தாக்கியது. ஆனாலும் பந்தில் போதிய வேகமில்லாத காரணத்தால் பெயில்கள் விழவில்லை.