
பாகிஸ்தான் அணியானது வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள காரணத்தால், இரண்டாவது போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஏனெனில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் ஓய்வரை, ரசிகர்களின் இருக்கை மற்றும் உள்கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதன் காரணாக, இங்கு நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதில் இல்லை என்றும், ஒருவேளை இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி இருந்தால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்று பிசிபி அறிவித்துள்ளது.