பாபர் ஆசாம் தோல்வியை தாங்கமுடியாமல் கண் கலங்கி நின்றார் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் பாபர் ஆசாம் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றதாக ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் அணியான பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட 283 ரன்கள் இலக்கை, 49 ஓவர்களில் எட்டி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஆஃப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர் குர்பாஸ் தான். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய குர்பாஸ், 53 பந்துகளில் 65 ரன்களை விளாசி தள்ளினார். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால், ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Trending
இந்த போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தரப்பில் ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸிற்கு பேட் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அணி ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். தோல்வியின் போது இதுபோன்ற பரிசுகளை வழங்க வேண்டியது அவசியமா என்ற கேள்விகளை எழுப்பினர்.
இந்த விவகாரம் குறித்து ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் பேசுகையில், “இந்த விவகாரம் பற்றி பொதுவெளியில் பேசலாமா என்ற தெரியவில்லை. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த பாபர் அசாம் கண்ணீர்விடும் தருவாயில் இருந்தார். ஆனால் அழுது விட கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தார். மிகுந்த ஏமாற்றத்துடன் பாபர் அசாம் இருந்ததை போல் வேறு எந்த வீரரையும் நான் பார்த்ததே இல்லை.
ஆனால் ஒவ்வொருவரும் பாபர் அசாமிற்கு எதிராகவே இருந்தனர். நிச்சயம் அவருக்கு சல்யூட் செய்ய வேண்டும். பாபர் அசாம் உடனான அந்த நிமிடத்தை மறக்கவே முடியாது. பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பின், அவரிடம் நான்தான் பேட் ஒன்றை பரிசாக கேட்டேன். அதன்பின் அவர் பேட்டை கொண்டு வந்த எனக்கு அளித்த போதும் கூட, ஏமாற்றத்துடன் இருந்தார். ஒரு வீரராக அவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டன்களில் அவரும் ஒருவர்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now