
வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் 2022 ஆசிய கோப்பை நடைபெறுகிறது. வரலாற்றில் 15ஆவது முறையாக நடைபெறும் இந்த தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கும் நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டதற்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான முடிவல்ல என்று முன்னாள் தமிழக வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்களே விமர்சித்துள்ளனர்.
ஏனெனில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் பினிஷிங் செய்யும் திறமை பெற்றிருப்பதாக கூறும் முன்னாள் வீரர்கள் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பிங் செய்பவர்களாக இருக்கும் நிலையில் வெறும் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து அணியில் ஒரு இடத்தை வீணடிக்க வேண்டாம் என்று கருதுகின்றனர்.