
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனை இஷமா தஞ்சிம் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஃபர்கானா ஹக் - ஷர்மின் அக்தர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் பொறுப்புடன் விளையாடியதுடன் அரைசதங்களை பூர்த்தி செய்தும் அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இருவரும் தலா 57 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டையும் இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானாவும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கையும் கொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய சோபனா மோஸ்டரி, ரிது மோனி, ஃபஹிமா கதும் உள்ளிட்டோர் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினாலும், வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்களைச் சேர்த்தது. ஸ்காட்லாந்து தரப்பில் கேபட்ன் கேத்ரின் பிரைஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.