Advertisement

IND vs BAN, Asia Cup 2023: இந்தியாவிற்கு பாடம் புகட்டிய வங்கதேசம்!

இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 15, 2023 • 23:08 PM
IND vs BAN, Asia Cup 2023: இந்தியாவிற்கு பாடம் புகட்டிய வங்கதேசம்!
IND vs BAN, Asia Cup 2023: இந்தியாவிற்கு பாடம் புகட்டிய வங்கதேசம்! (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், தன்ஸித் ஹசன் 13 ரன்களிலும், அனாமுல் ஹக் 4 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் மிராஸ் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் வங்கதேச அணி 59 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.  இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - தாஹித் ஹிரிடோய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய இந்த இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Trending


இதில் அரைசதம் கடந்திருந்த ஷாகிப் அல் ஹசன் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 52 ரன்களைச் சேர்த்திருந்த தாஹித் ஹிரிடோயும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் நசும் அஹ்மது - மெஹிதி ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நசும் அஹ்மத் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹிதி ஹசன் 29 ரன்களையும், தான்சிம் ஹசன் ஷாகிப் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் திலக் வர்மாவும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தேவையில்லாமல் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - கேஎல் ராகுல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் கேஎல் ராகுல் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த இஷான் கிஷன் 5, சூர்யகுமார் யாதவ் 26, ரவீந்திர ஜடேஜா 7 ரன்கள் என அடுத்தடுத்து தேவையில்லாத ஷாட்களை விளையாடி விக்கெட்டுகளை இழந்தனர். 

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 121 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இந்திய அணியின் வெற்றியும் கேள்விக்குறியானது. அதன்பின் அக்ஸர் படேல் ஒருபக்கம் வெற்றிகாக போராட, மறுமுனையில் ஷர்துல் தாக்கூர் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 42 ரன்களை எடுத்திருந்த அக்ஸர் படேலும், முஸ்தபிசூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க,  இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், தன்ஸிம் ஹசன் ஷகிப், மஹெதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதேசமயம் இந்திய அணி நாளை மறுநாள் இலங்கை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதால் இத்தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement