
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் விளையாட இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.
ஏற்கனவே இந்தியா தவிர மற்ற அணிகள் தங்களது வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா மட்டுமே வீரர்களை அறிவிக்காமல் இருந்தது. இதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடல் தகுதியை இந்திய அணி நம்பியிருந்தது. இருவரும் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடி தங்களது உடல் தகுதியை நிரூபித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று டெல்லியில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் மீட்டிங் நடந்தது. இதையடுத்து, பிற்பகல் 1.30 மணிக்கு இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.