
சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் பிசிசிஐ ஒப்பந்த வீரர்களில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் ஏ+ கிரேடில் இடம் பிடிக்க வேண்டுமானால் மூன்று வடிவிலான போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி ஏ+ கிரேடில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
ஏ கிரேடில் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.