
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா புதன்கிழமை நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக விராட் கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், கோலி விலக மறுத்துவிட்டதாகவும் ஏராளமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.
இந்த நிலையில், புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்திருப்பது பற்றி பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இந்த முடிவை பிசிசிஐயும், தேர்வுக் குழுவும் சேர்ந்துதான் எடுத்தது. டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது எனத் தேர்வுக் குழுவினர் எண்ணினர். எனவே, டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியும், ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவும் செயல்படட்டும் என முடிவெடுக்கப்பட்டது.