
டி20 உலக கோப்பை தோல்விக்கு அணி தேர்வு சரியில்லாததும் ஒரு காரணம் என விமர்சிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷாவை தேர்வு செய்யாததும் விமர்சனத்துக்குள்ளானது. டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேயில் ஆக்ரோஷமான பேட்டிங்கை இந்திய அணி விளையாட வேண்டும். இந்திய அணியின் அணுகுமுறையை கண்டிப்பாக மாற்றியே ஆகவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது . அப்படியிருக்கையில், இயல்பாகவே அதிரடியாக விளையாடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்கவல்ல பிரித்வி ஷாவை அணியில் எடுக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகிய வீரர்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு முன் இந்திய அணியில் இடம்பிடித்த, திறமையான வீரரான பிரித்வி ஷாவை தேர்வு செய்யாதது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் ஐபிஎல்லை அடிப்படையாக வைத்து அணி தேர்வு செய்ததும் சர்ச்சைக்குள்ளானது.
கடந்த டி20 உலக கோப்பைக்கான அணியில் வருண் சக்கரவர்த்தியை எடுத்தது, இந்த டி20 உலக கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஆகிய தேர்வுகள் ஐபிஎல்லின் அடிப்படையில் அமைந்தது. ஐபிஎல் அடிப்படையில் இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது சரியான முறையல்ல என்று விமர்சனங்கள் வலுத்தன. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை, 2024 டி20 உலக கோப்பை ஆகிய பெரிய தொடர்களுக்கான அணிகளை இப்போதிருந்தே கட்டமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.