தனது சம்பளத்தை நிதியாக வழங்கிய பென் ஸ்டோக்ஸ்; பாராட்டும் ரசிகர்கள்!
இந்த வருடம் ஆரம்பத்தில் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான் மக்களுக்காக இத்தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்பதால் கிடைக்கும் தனது சம்பளத்தை முழுவதுமாக நிதியாக கொடுப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்

Ben Stokes To Donate Entire Match Fees From Tests Against Pakistan To Flood Relief Appeal (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து மீண்டும் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்தாலும் வெற்றிக் கோப்பையுடன் மகிழ்ச்சியாக நாடு திரும்பியது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் துவங்குகிறது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இன்று தங்களது நாட்டுக்கு வந்த இங்கிலாந்து வீரர்களுக்கு பாகிஸ்தான் வாரியம் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சமீப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது வருகைக்கு பின் நியூசிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி தோற்கடித்து உலக அளவில் பாராட்டுகளை பெற்றது.
அந்த புதிய அணுகு முறையில் இதர அணிகளுக்கு முன்னோடியாக நல்ல பார்மில் இருக்கும் இங்கிலாந்து சமீப காலங்களாகவே தடுமாறும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இத்தொடரையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் இடம் பெறாத பென் ஸ்டோக்ஸ் தனது கேரியரில் பாகிஸ்தான் மண்ணில் இப்போது தான் முதல் முறையாக விளையாடுகிறார்.
இந்நிலையில் இந்த வருடம் ஆரம்பத்தில் கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான் மக்களுக்காக இத்தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்பதால் கிடைக்கும் தனது சம்பளத்தை முழுவதுமாக நிதியாக கொடுப்பதாக அறிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், “வரலாற்றில் நீண்ட வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்த தொடருக்காக பாகிஸ்தான் வந்துள்ளது மிகப்பெரிய தருணமாகும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 வருடங்கள் கழித்து இங்கு விளையாட ஆவலுடன் உள்ளேன். இங்கே விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்புணர்வு உள்ளது சிறப்பாகும். இருப்பினும் இந்த வருட ஆரம்பத்தில் பாகிஸ்தானில் உண்டான வெள்ளம் அந்நாட்டு மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்தது மிகவும் இருந்தது. எனது வாழ்க்கையில் இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது.
எனவே அதற்கு கிரிக்கெட்டை தாண்டி திரும்ப கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். அதனால் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து எனக்கு கிடைக்கும் போட்டி கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள மேல்முறையீட்டு நிதிக்காக வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டி எழுப்ப உதவும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
பாகிஸ்தானுக்கு முதல் முறையாக வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே இப்படி ஒரு பரந்த மனதுடன் செய்த உதவியை பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவிக்கிறார்கள். அதே போல் நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் நட்சத்திரங்களும் கிரிக்கெட்டை தாண்டி இப்படி ஒரு மனித நேயத்துடன் உதவியதற்காக அவருக்கு நன்றியை தெரிவிக்கிறார்கள்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News