பென் ஸ்டோக்ஸ் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன் - ஒல்லி போப்
பென் ஸ்டோக்ஸின் காயம் பெரிதளவில் இருக்காது என்று இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.

India vs England 3rd Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்தைச் சந்தித்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்னிலும், ஸாக் கிரௌலி 18 ரன்னிலும், ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கைவசம் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இப்போடியின் போது இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்தை சந்தித்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஸ்டோக்ஸ் 32 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நிதிஷ் குமார் ரெட்டியின் வெளிப்புற பந்து வீச்சை விளையாட முயன்ற போது அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வலியால் அலறிய ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்து அணி மருத்துவர்கள் மைதானத்திலேயே சிகிச்சை அளித்தனர்.
பின்னர் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் மீண்டும் தனது பேட்டிங்கைத் தொடர்ந்தார். இருப்பினும் அவர் பேட்டிங் செய்யும் போது அசௌகரியத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரது காயம் தீவிரமடையும் என்ற ஆச்சமும் இங்கிலாந்து அணியில் நிலவுகிறது. இந்நிலையில் ஸ்டோக்ஸ் குறித்து பேசிய இங்கிலாந்து துணைக்கேப்டன் ஒல்லி போப், “பென் ஸ்டோக்ஸ் ஏதாவது மாயாஜாலத்தைச் செய்து வலுவான கம்பேக்கை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
முதல் நாள் ஆட்டம் முடிந்ததிலிருந்து நான் அவரைப் பார்க்கவில்லை, இருப்பினும் அவரது காயம் தீவிரமடைந்திருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் அடுத்த நான்கு நாள்களில் எங்களுக்கு முன்னால் ஒரு பெரிய டெஸ்ட் போட்டி உள்ளது, மேலும் இத்தொடரில் இரண்டு பெரிய டெஸ்ட் போட்டிகள் உள்ளன. எனவே அவர் காயத்தில் இருந்து விரைவில் குணமடைய வேண்டியது எங்களுக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை பென் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்து இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகினால் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் தான் காயத்தில் இருந்து மீண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சிலும் அணிக்கு பங்களித்து வரும் நிலையில், இப்போட்டியில் அவரால் மீண்டும் பந்துவீச முடியுமா என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now