
இந்தாண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா செயல்பட உள்ளது. முன்னதாக கடந்த வருடம் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோற்று வழக்கமான ஏமாற்றத்தை கொடுத்தது. அதற்கு ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டார்கள் என்பதை விட ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தனைக்கும் அதற்கு முன்பாக ஏற்கனவே காயமடைந்து குணமடைந்து வந்த அவர்கள் மீண்டும் முக்கிய தொடர்களுக்கு முன்பாக காயமடைந்து வெளியேறியதால் கடுப்பான ரசிகர்கள் பெங்களூருவில் அவர்களை சோதிக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்ன தான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கேப்டன் ரோகித் சர்மாவும் பிட்டாக இல்லாமல் அடிக்கடி காயம் மற்றும் பணிச் சுமையால் ஓய்வெடுத்ததால் வரலாற்றில் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எனவே இவை அனைத்துக்கும் சுமாரான ஃபிட்னஸ் தான் காரணம் என்று கருதிய பிசிசிஐ அடுத்து வரும் தொடர்களில் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகும் வீரர்கள் முதலில் யோ-யோ மற்றும் டெக்ஸா சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டியதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது மிகவும் கடினமான உடல் தகுதி சோதனைகளை கொண்ட இந்த யோ-யோ டெஸ்ட் ஏற்கனவே கடந்த 2018 வாக்கில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஆனால் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டப்பட்ட அந்த டெஸ்ட் தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு நிறைய ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கும் நிலையில் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.