
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், பதிலுக்கு ஆஸ்திரேலிய அணியோ முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைக் குவித்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறியதுடன் 175 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் அஸ்திரேலிய அணிக்கு வெறும் 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்திருந்தது.
அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.