
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த தங்களது கணிப்புகளை ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் தற்போதுள்ள வீரர்கள் என அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்சமயம் அவர்களது வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் இணைந்துள்ளார். அதன்படி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது ரசிகர்களின் காவனத்தை ஈர்த்தூள்ளது.