Advertisement

மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!

ரஞ்சிக் கோப்பையை வென்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 16, 2024 • 12:44 PM
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 25ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக சிறந்த மிடில் ஆர்டர் பேட்மேனாகவும் துணை கேப்டனாகவும் செயல்பட்டு வந்த ரஹானே 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அந்த தொடருக்கு பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவர் கடந்த 2022 பிப்ரவரியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.

Trending


அப்போது மனம் தளராமல் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து போராடிய அவர் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அபாரமாக செயல்பட்டார். அதன் காரணமாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

இதனால் மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் 2023 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மோசமாக செயல்பட்டதால் கடந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை தொடர்ந்து தற்போதும் கழற்றி விடப்பட்டுள்ளார். மேலும் போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் போன்ற நிறைய வீரர்கள் போட்டிக்கு இருப்பதால் ரஹானேவின் இந்திய கேரியர் முடிந்ததாகவே கருதப்படுகிறது. 

இந்நிலையில் ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் ரகானே இந்திய அணியில் கம்பேக் கொடுத்து 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைப்பதில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரஞ்சிக் கோப்பையை வென்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும். தற்போதைக்கு மும்பை அணிக்காக சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்தும் நான் ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் 5,077 ரன்களை எடுத்துள்ள ரஹானே தற்போது 35 வயது மட்டுமே நிரம்பியுள்ளார். எனவே இன்னும் 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் கண்டிப்பாக தொடர்ந்து போராடினால் புஜாரா போல மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவுக்காக 100 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement