
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக சில அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கியது. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் 15 கோடிக்கு வாங்கியது மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது.
அதற்கு நிகராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து 17.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்துவதற்காக அவரை பெங்களூரு இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
அதே சமயம் ஹர்ஷல் பட்டேல், வணிந்து ஹஸரங்கா, ஜோஸ் ஹேசில்வுட் ஆகிய 3 முக்கிய பவுலர்களை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. இந்நிலையில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை சுமாரான பவுலிங் தான் பெங்களூரு அணியின் பலவீனமாக இருந்து வருவதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். எனவே கேமரூன் கிரீனை வாங்கினாலும் ஏலத்தில் பவுலிங் கூட்டணி வலுவாக இருக்கும் அளவுக்கு தரமான வீரர்களை வாங்குமாறு பெங்களூரு அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளும் அவர் சின்னசாமி மைதானத்தில் எப்போதுமே சிறப்பாக பந்து வீசுவது கடினம் என்று கூறியுள்ளார்.