
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அனைத்து இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.
இருப்பினும் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா அதற்காக மனம் தளராமல் அடுத்ததாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
அதை தொடர்ந்து உலகக் கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்தியா முதல் போட்டியில் வென்று 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அப்போட்டியில் அனலாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் 106 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை சுருட்டி வெற்றிபெற வைத்தனர்.