
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியள்ளது. அதன்படி இலங்கை அணியின் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து அணியின் ஈயன் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இந்தியாவின் ராகுல் டிராவிட் என பல்வேறு ஜாம்பவான்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியன.
இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிராண்டன் மெக்கல்லம் தற்போது இங்கிலாந்து அணியின் அனைத்து வடிவ ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 2027ஆம் ஆண்டு வரை அவர் இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.