
இந்திய கிரிக்கெட்டுக்கு கபில்தேவுக்கு அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு நிலையான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஐபிஎல் தொடர் மூலம் கிடைத்தவர் ஹர்திக் பாண்டியா. ஆனால் இந்த நம்பிக்கை அதிக ஆண்டுகள் நீடிக்க வில்லை. 2018 ஆம் ஆண்டு காயத்தில் சிக்கிய அவர் அணியில் இருந்து விலகினார். அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வந்தவர், 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு வந்து, பிறகு தாமாக கேட்டுக் கொள்வதற்கு முன்பாக அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று வெளியேறி விட்டார்.
அதற்குப் பின்பு உடல் தகுதியில் மிகக் கடுமையாக உழைத்து முன்னேறி வந்தார். இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியாவை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்காமல் ஏலத்தில் வெளியே விட்டது.அதன்பின் புதிய அணியாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு விடாமல் வாங்கியதோடு கேப்டன் ஆகவும் அறிவித்தது. அவரும் அதற்கு திருப்பி கோப்பையை வென்று கொடுத்து முதல் சீசனிலேயே அசத்தினார். மேலும் இந்த ஐபிஎல் சீசனிலும் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்தார். இது மட்டும் இல்லாமல் இந்திய டி20 அணிக்கு தற்பொழுது கேப்டனாகவும் உருவாகி இருக்கிறார்.
இவர் ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட பொழுது, கேப்டன்சியில் தன்னுடைய பாதை மகேந்திர சிங் தோனியின் பாதைதான் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். மேலும் களத்திலும் மகேந்திர சிங் தோனியின் பல விஷயங்களை அப்படியே செயல்படுத்தினார்.