
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாச்த்தில் வெற்றிபெற்று அசத்தியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் மிடில் ஆர்டரில் தாவ்ஹித் ஹிரிடோர் மற்றும் ஜக்கர் அலியின் அபாரமான பார்ட்னர்ஷிப் மூலம் அந்த அணி 228 ரன்களைச் சேர்த்தது. இதில் தாவ்ஹித் ஹிரிடோய் தனது சதத்தை பதிவுசெய்த நிலையில், ஜக்கர் அலி அரைசதம் கடந்து அசத்தனர். பின்னர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச அணி சில விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது.
இருப்பினும் ஷுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இணை சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 47ஆவது ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 101 ரன்களையும், கேஎல் ராகுல் 41 ரன்களையும் சேர்த்தனர். இதயடுத்து வங்கதேச அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்றால் மட்டுமே இத்தொடரில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளதால், தீவிரமாக தயாராகி வருகிறது.