
அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்ணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதன்படி இந்திய வீரர்களே இரு குழுக்களாக பிரிந்து தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.