
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 4 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - விராட் கோலி ஆகியோர் ஓரளவு தாக்கு பிடித்து மூன்றாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 20 ரன்களில் ஷுப்மன் கில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் 17 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 72 ரன்களுக்கே 4 விக்கெட் இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்துள்ள ரிஷப் பந்த் - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 40 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 26 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும் என ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடி காட்டிய கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.