
இந்திய கிரிக்கெட்டில் எல்லாவித திறமைகள் இருந்தும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போன பலவீரர்கள் இருக்கிறார்கள். சமீபகால உதாரணமாக ஷிகர் தவான் இருக்கிறார். ஆனால் இவருக்காவது தேவைப்பட்ட அளவுக்கு வாய்ப்புகள் கிடைத்த பின்பு புறக்கணிக்கப்பட்டார். ஆனால் இவரை விட மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறார்.
அவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி. மொத்தம் எட்டு ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு 15 போட்டிகள் மட்டுமே. இதில் ஒருநாள் போட்டியில் ஒரு முறை சதம் அடித்திருக்கிறார், மேலும் பந்துவீச்சில் லெக் ஸ்பின்னர் ஆக ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இப்படி இருந்தும் கூட மகேந்திர சிங் தோனி கேப்டன்சி காலத்தில் ஒதுக்கப்பட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய இவருக்கு கடைசி போட்டியாக 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி அமைந்தது. ஏறக்குறைய இந்த எட்டு ஆண்டுகளில் இவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு என்பது வெறும் 12 போட்டிகளில் மட்டுமே. இதற்கு நடுவில் இவருக்கு இந்திய டி20 அணியில் மூன்று வாய்ப்புகள் தரப்பட்டது. 12 ஒரு நாள் போட்டிகளில் 287 ரன்கள், ஒரு சதம் மற்றும் அரை சதம் அடித்திருக்கிறார். சிறந்த பந்துவீச்சாக நான்கு விக்கெட்டுகள் இலங்கைக்கு எதிராக கைப்பற்றி இருக்கிறார்.